சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு தொடர்பான ஒப்பந்தம் இன்னும் ஏன் பகிரங்கப்படுத்தப்படாமல் உள்ளது என்று ‘உத்தர லங்கா சபாகய’வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார் விமல் வீரவன்ச.
” சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்தது. அது தொடர்பான ஒப்பந்தம் ஏன் இன்னும் முன்வைக்கப்படவில்ல, அவற்றில் உள்ள சரத்துகள் எவை, எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்பன தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.” – எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,
” இதற்கு முன்னரும் இது தொடர்பில் பல தடவைகள் கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இணக்கப்பாடு தொடர்பில் வரைவொன்றே உள்ளது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.” – என்றார்.










