எங்கள் வழியில் ரணில் – மஹிந்த பெருமிதம்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான வழிக்கு – எங்கள் பக்கம் வந்துள்ளார். எனவே, அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டு இந்தப் பயணத்தை தொடர்வோம்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அறிவித்தார்.

‘ஒன்றாக எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் களுத்துறையில் நடைபெற்ற ‘மொட்டு’க் கட்சி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மஹிந்த இவ்வாறு அறிவித்தார்.

“நாம் இன்று பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்குரிய சக்தி எம் வசம் உள்ளது. எனவே, மக்களின் தேவை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதே எமது கடமையாக உள்ளது. அதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எனவே, நாம் ஒன்றிணைந்து பயணிப்போம்.

ரணில் விக்கிரமசிங்கவை அன்று நாம் யூ.என்.பி. காரன் என விமர்சித்தோம். இன்று அவர் எம் பக்கம் உள்ளார். அவர் சரியான பாதைக்கு திரும்பிவிட்டார் என நம்புகின்றேன்.

நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்தப் பயணத்தைத் தொடர்வோம்” – என்றார்.

Related Articles

Latest Articles