தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட துரையை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியும் புசல்லாவை, நிவுபிகொக்- சப்லி தோட்ட தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிவ்பிகொக் சப்லி தோட்ட பிரதான பாதையில் இருந்து பேரணியாக வந்து தொழிலாளர்கள், கொழுந்து மடுவத்தின் முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிவுபிகொக் – சப்லி தோட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி , தோட்டத்தை சேர்ந்த ஒருவரின் மரணசடங்கிக்கு தோட்டத்தொழிலாளர்கள் விடுமுறை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் தொழிலாளர்கள் இரண்டு மணிக்கு கொழுந்து சேகரிக்கும் மடுவத்திற்கு வந்தும் தோட்ட நிறுவாகம் கொழுந்தை பாரம் எடுக்க முடியாது, இன்றைய தினத்துக்கான சம்பளமும் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் பின்னர் தொழிலாளர்கள் இணைந்து கொழுந்தை தொழிற்சாலைக்கு அனுப்பியுள்ளனர். வழமையாக தோட்டத்தில் யாராவது இறந்தால் அவரின் மரணசடங்குக்கு கட்டாயமாக இரண்டு மணிக்கு விடுமுறை வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே இந்த மரணசடங்குக்கு விடுமுறை வழங்காமைக்கும் தோட்டத்தில் மக்களின் அத்தியவசிய தேவைகளை கூட தோட்ட நிறுவாகம் செய்து கொடுப்பதில்லை என கூறியே தொடர்சியாக மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புஸல்லாவை பவன்










