ஒரு நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரச, அரை அரச மற்றும் தனியார் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டு இந்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாயின், அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இன்று மக்கள் படும் இன்னல்களை தாம் மறந்து விடவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , எவ்வாறேனும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சமுர்த்திக் கொடுப்பனவு கிடைக்காத சுமார் 20 இலட்சம் குடும்பங்களுக்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
“பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாட்டில் நாம் இருக்கிறோம். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இன்று நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் நன்கு அறிவேன். தொழில் வாய்ப்புகள் குறைவடைந்து செல்வதை நாம் பார்க்கிறோம். பணவீக்கம் காரணமாக குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
மக்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. அன்று இருந்த வசதிகள் தற்போது இல்லை. இதனால் கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் இந்தப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட நிலைமைகளாகும். இது எப்படி நடந்தது என்று இப்போது பேசிப் பயனில்லை.இப்போது அது முடிந்துவிட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதே இப்போது எமக்கு இருக்கும் ஒரே வழி. இல்லையெனில், நாம் மீள முடியாது. அந்தப் பாதையில் செல்லப் போகிறோமா அல்லது வீழ்வதா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த வீழ்ச்சியடைந்த நாட்டை விரைவில் மீட்கவே முயற்சி எடுக்கின்றேன். ” – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.










