கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கிக்குள் இன்று (25) அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த மூகமூடியணிந்த நான்கு கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி காவலாளியை அச்சுறுத்தி – கட்டிபோட்டுவிட்டு அங்கிருந்த பணப் பரிமாற்று இயந்திரத்தினை ( கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர் கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை கண்டிவீதியில் அமைந்துள்ள குறித்த வங்கிக்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் கே.டீ.எப் ரக வேன் ஒன்றில் வந்த குறித்த கொள்ளையர்கள், வேனினை வீதிக்கு குறுக்காக நிறுத்திவிட்டு முகமூடியணிந்த நிலையில் ஆயுதங்களுடன் வங்கிக்குள் புகுந்து காவலாளியின் தலையில் துப்பாக்கியினை வைத்து கதிரையுடன் கட்டிவைத்துவிட்டு அங்கிருந்த பணப் பரிமாற்று இயந்திரத்தினை கழட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளனர் என வங்கிக் காவலாளி பொலிஸ் விசாரணையின் போது கூறியுள்ளார். அத்துடன், வேனின் இலக்கத்தினையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்
மேற்படி கொள்ளையிடம் பெற்ற வங்கிக்கு அருகிலேயே மேலும் இரண்டு வங்கிகள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காவலாளி பின்னர் தன்னை கட்டியிருந்த கயிற்றினை கழட்டிக் கொண்டு வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை மணியினை அழுத்தியதையடுத்து அங்கு வந்த பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டனர்
கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் ரட்ணாயக்கவின் ஆலோசனைக்கமைய கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பிரணாந்து தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை நிருபர்
