” நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேற்று அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

எனினும், இது பற்றி தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், கடிதம்கூட இன்னும் அனுப்படவில்லை, முடிந்தால் கடிதம் அனுப்பட்டும், அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி.எல். பீரிஸ் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அறிவித்தார்.
இது தொடர்பில் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த செயலாளர் சாகர காரியவசம்,
” எமது கட்சி நன்றி மறவாத கட்சியாகும். ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றும் கட்சியாகும். எனவே, தான் மொட்டு கட்சி தவிசாளரா என்பது பற்றி பீரிஸ் தனது மனசாட்சியிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். எது எப்படி இருந்தாலும் இது விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய தவிசாளராக பொருத்தமான நபரொருவர் தெரிவு செய்யப்படுவார்.” – என்றார்.
