” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அல்லர். அவர்தான் தேசிய அமைப்பாளர் என கட்சி எந்தவொரு கட்டத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை விடுக்கவில்லை.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்சவே அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக அரசியல் வட்டாரத்தில் அடையாளப்படுத்தப்பட்டார். பஸில் ராஜபக்ச பங்கேற்ற நிகழ்வுகளின்போதுகூட அவர் தேசிய அமைப்பாளர் என்றே விளிக்கப்பட்டார்.
ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அல்லர் என்ற விடயத்தை டலஸ் அணி அண்மையில் அம்பலப்படுத்தியது. இதற்கு மொட்டு கட்சி பதிலடி கொடுக்கவில்லை.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சாகர காரியவசத்திடம் கேள்வி எழுப்பட்டது.
இதன்போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் அல்லர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். அவர்தான் தேசிய அமைப்பாளர் என கட்சி அதிகாரப்பூர்வமாக எங்கும் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சபுமல் வலவ்வத்த என்பவரே மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
