தமது அரசியல் எதிரிகளின் மனங்களையும் வென்று நாட்டை மீட்பதற்கான பயணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அவர் இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை நிச்சயம் வகிப்பார் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜே.ஆர். ஜயவர்தன 70 வயது கடந்த பின்னரே ஜனாதிபதியானார். இரு தடவைகள் அப்பதவியில் நீடித்தார். நாட்டுக்கு சிறப்பான சேவையை வழங்கினார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் 70 வயது கடந்துதான் ஜனாதிபதியாகியுள்ளார். அவரும் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். வளமான எதிர்காலத்தை உருவாக்குவார். 2048 இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு அவரும் இரு தடவைகள் பதவியில் இருப்பார்.” எனவும் அகில குறிப்பிட்டார்.
