சுற்றுலா வந்த யுவதி காட்டு யானை தாக்கி பலி – கொஸ்லாந்த பகுதியில் சோகம்!

பண்டாரவளை, கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் ‘தற்காலிக கூடாரம்’ அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நிலையில், யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞன் கொஸ்லாந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தயத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குருணாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், மாத்தறை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியும் சுற்றுலா வந்த நிலையில், நீர்வீழ்ச்சிப் பகுதியில் கூடாரம் அமைத்து நேற்றிரவு தங்கியுள்ளனர்.

இரவுவேளையிலேயே அவர்களை காட்டு யானை தாக்கியுள்ளது.

உயிரிழந்த யுவதியின் சடலம் , நீதவான் பரிசோதனைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்கள் காதல் ஜோடியா அல்லது தம்பதியினரா என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles