அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) சபையில் அறிவித்தார்.
“ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ்வருமாறு,
சட்டமூலத்தின் 1, 2(1)(f), 2(2), 3(2), 4(1)(a), 4(1)(b), 4(3), 17(1), 21, 31(2), 163(2)(h), 40, 48(3), 49(1)(f), 50(1)(a), 53(1), 62(1), 65, 67(5), 71(6) மற்றும் (, 80, 93, 99, 101, 112, 149 மற்றும் 162 ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு ஒத்திசைவாகாது.
எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின் இந்த ஒத்திசைவாகாத தன்மை இல்லாமல்போய்விடும்.
இந்தத் திருத்தங்களுக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றத்தினால் குறிபிடப்பட்டிருப்பதாவது, சட்டமூலத்தின் 8(3), 136, 141, 142 மற்றும் 156 வாசகங்கள் தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மூலம் மனுதாரர்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “மாகணசபை தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்தினை திருத்துவதற்கும் மற்றும் 4ஆம் வாசத்தின் நீக்குவதற்குமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டு சட்டமூலமோ அல்லது அதன் எந்த ஏற்பாடுகளுமோ அரசியலமைப்பக்கு ஒவ்வாதனவாகவிராது என உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
