பிரிவினைவாத சக்திகளின் கைக்கூலியே சாணக்கியன் – அலிசப்ரி பதிலடி!

வெளிநாட்டு பிரிவினைவாத குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் – என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” வெளிநாட்டு பிரிவினைவாத குழுக்களின் கைக்கூலியாக செயற்படும் ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். அவர்தான் ராசமாணிக்கம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விருப்பம் அற்றவர்தான் அவர். இனப்பிரச்சினை நீடித்தால்தான் தம்மால் அரசியல் செய்ய முடியும் என கருதுகின்றார். அதனால்தான் தீர்வைக்காணும் எமது முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.

நாம் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முற்பட்டால் அதனைக் குழப்புமாறு வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகள் அவருக்கு ஆலோசனை வழங்கும். அந்த ஆலோசனையின் பிரகாரம்தான் அவர் கொக்கரிக்கின்றார். நேற்றும் கொக்கரித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நான் அரச வீடொன்றை வழங்கியுள்ளதாக கூறுகின்றார். அது பொய். அவ்வாறு எனக்கு வீடு வழங்க முடியாது. நான் அரச வீட்டில் வசிப்பதும் இல்லை. சொந்த வீட்டில்தான் வாழ்கின்றேன். எனவே, சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு சில்லறைத்தனமான கருத்துகளை வெளியிட முற்படக்கூடாது. ” எனவும் அலிசப்ரி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles