எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு நுளம்பு குடம்பிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் டெங்கு ஒழிப்புக்கான அமைச்சர் குழுவொன்றையும், நிபுணர் குழுவொன்றையும் நியமித்ததோடு நிபுணர் குழுவினால் மாகாண மட்டத்தில் 09 உப குழுக்கள் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகள் என்பவற்றில் பரிசோதனை மேற்கொள்ள விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இந்த செயற்திட்டங்கள் மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களுக்குத் தனித்துவமான பிரச்சினைகளை அடையாளங்கண்டு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போது நிலவும் காலநிலையுடன் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால் கோவிட் தொற்றைப் போன்று டெங்கு நோயும் அபாயகரமான நிலைமைக்கு மாறக் கூடும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,
“டெங்கு பரவுவது உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த வருடத்தின் முதற்பாதியில் மாத்திரம் 47,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மற்றும் 27 டெங்கு மரணங்கள் எமது நாட்டில் பதிவாகியுள்ளன.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர் குழுவும் நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது. நிபுணர் குழுவில் விசேட வைத்திய நிபுணர்களான ஆனந்த விஜேவிக்ரம, லக்குமார் பெர்னாண்டோ, உபுல் திஸாநாயக்க மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பேராசிரியர் நிலிகா மளவிகே ஆகியோர் அடங்குவர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துகையில் நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதும், நுளம்புக்கு வைரஸ் வராமல் தடுப்பதும் மிகவும் முக்கியமானது.மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நுளம்புகள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். நுளம்பு கடிக்கும் வாய்ப்புகளை குறைக்க மக்களுக்கு அறிவூட்டுவது மிக அவசியம். மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில், ஒரு நுளம்பிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு டெங்கு பரவும் வாய்ப்பு கூடுதலாகக் காணப்படுகிறது.
மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு உப குழுக்களின் ஊடாக தொடர் அவசர வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மாதங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளர் தொகை அதிகரிப்பதை மட்டுப்படுத்த இந்த செயற்பாடுகளின் ஊடாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் வார இறுதியில் முப்படையினரின் ஆதரவுடன் கொழும்பு நகரில் விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. டெங்கு ஒழிப்புப் பிரிவு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் இந்தப் பணியில் இணைந்து கொள்ளவுள்ளதுடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உரிய அறிவித்தல்களை மேற்கொள்ளும். அதன்படி, எதிர்வரும் வார இறுதியில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருந்து இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதன் பின்னர், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறிப்பிட்ட நாட்களில் பாடசாலைகள், மத ஸ்தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள் உள்ளிட்ட டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களில் ஒரு வாரத்திற்கு நுளம்புக் குடம்பிகள் குறித்து பரிசோதனை செய்யப்படும்.
அதேநேரம், மாகாண சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தான் நோயாளி என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள டெங்கு நோயாளர்கள் முன்வர வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த சமயத்தில் ஊடகங்களினால் பெரும் பங்காற்ற முடியும் என்றார்.










