காசாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தரைப்படை!

இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவுக்கு முன்னேறி ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“இது எப்போது, எப்படி அல்லது எத்தனை என்று நான் கூறமாட்டேன்” என்று கடந்த புதனன்று (25) தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு குறிப்பிட்டார்.

முழு முற்றுகையில் உள்ள காசா பகுதி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஏற்கனவே அந்தப் பகுதி பெரும் பேரழிவுகளை சந்தித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை பிடித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அந்த பணயக்கைதிகளில் சிலரை கொல்லப்போவதாக எச்சரித்துள்ளது. இந்தப் பணயக்கைதிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் 25 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு ஏழாயிரத்தை தாண்டிய நிலையில் இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் குறித்து மத்திய கிழக்கு தலைவர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே இஸ்ரேல் மீது மற்ற இடங்களில் இருந்து ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் குறித்து” பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதில் காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அங்கிருக்கு பாதுகாப்பாக வெளியேறுவது, இஸ்ரேல் முடக்கி வைத்திருக்கும் அந்த குறுகிய கடலோரப் பகுதிக்கு தொடர்ந்து உதவிகள் செல்வது மற்றும் பலஸ்தீன மக்களுக்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று அதிகாலை பாரிய ஊடுருவலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிக பாதுகாப்புக் கொண்ட எல்லையைத் தாண்டி இஸ்ரேலிய கவச வாகனங்கள் காசாவுக்குள் ஊடுருவுவது மற்றும் அடுத்த கட்ட போர் நடவடிக்கைக்கு தயாராவதற்கு கட்டடங்களை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் வெளிட்டது. காசாவில் தாக்குதல்களை நடத்தி விட்டு இஸ்ரேலிய தரைப்படை அங்கிருந்து வெளியேறியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

“டாங்கிகள் மற்றும் தரைப்படை பல பயங்கரவாத செல்கள், உட்கட்டமைப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்களை தாக்கின” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் தான் திட்டமிட்டிருக்கும் தரைவழி தாக்குதலை ஆரம்பிப்பதாக இது அமையவில்லை. அதற்கான முன்னேற்பாடாக இந்த ஊடுருவல் இருந்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் நேற்றைய தினத்திலும் நீடித்தது. புரைஜ் அகதி முகாமுக்கு அருகில் மத்திய காசா, கராரா கிராமத்தின் கிழக்கு பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமாக இருந்துள்ளன.

Related Articles

Latest Articles