அரச ஊழியர்களுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பள உயர்வு அவசியம்!

” வாழ்க்கைச்செலவு அதிகரிப்பால் மக்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர். இந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக மக்கள்மீது மென்மேலும் சுமைகளை திணிக்கும் வகையிலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. இந்நிலைமை தொடருமானால் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாமல்போகும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு,

” வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் மக்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர். அந்த அழுத்தத்தை குறைப்பதற்கு பதிலாக மின் கட்டணத்தை அதிகரித்து, மக்கள்மீது மேலும் அழுத்தம் திணிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. சமையல் எரிவாயு விலையும் மறுசீரமைக்கப்பட வேண்டும். இவ்வாறு தொடர் விலை அதிகரிப்பால் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலை தொடர்ந்தால் மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை ஏற்கமுடியாது என மொட்டு கட்சியினரும், சுதந்திரக் கட்சியினரும் கூறிவருகின்றனர். இந்த இரு தரப்பும்தான் நாட்டை ஆள்கின்றன. எனவே, நாடகமாடி மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றன. 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பாதீட்டை முன்வைக்குமாறு கோருகின்றோம். ” – என்றார்.

Related Articles

Latest Articles