” மலையக மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படும்” – ஜனாதிபதி உறுதி
“சிலோன் டீ” என்ற நாமத்தை உலகறியச் செய்தவர்கள் என்ற வகையில் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கிய மக்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாம்200 நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
” நவீன இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார புரட்சிக்கான முன்னோடி பணியை ஆற்றிய மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் இந்நாட்டில் குடியேறி இருநூறு வருடங்கள் பூர்த்தியாகின்றது.
அம்மக்கள் இந்த 200 வருடங்களில் இலங்கையின் முன்னேற்றத்துக்காக
தங்களது வியர்வை, கண்ணீர், இரத்தம் ஆகியவற்றை சிந்தி உழைத்தனர்.
“சிலோன் டீ” என்ற நாமத்தை உலகறியச் செய்தவர்கள் என்ற வகையில் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கிய மக்களாக வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர்.
மலையகத்தில் வாழும் மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கும் வகையில், அவர்களை வேறு தரப்பாக கருதாமல் இலங்கை மக்களாக ஒன்றிணைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அம் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் அதேவேளை, கல்வி, சுகாதாரம், வீடுகள் உள்ளிட்ட அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அரப்பணிப்புடன் செயற்படும் அதேநேரம், அதற்கான பெருமளவான பணிகளை முன்னெடுத்துவரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
பிரஜைகள் என்ற வகையில் சிரமத்தை மாத்திரம் விற்பனை செய்யாமல், தங்களுக்கான உரிமைகளை அனுபவிக்கும் தரப்பினராக மலையக தமிழ் மக்கள் வாழ்வதை காண்பதே எமது அரசாங்கத்தின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு நடத்தப்படும் “நாம் 200″ நிகழ்வுக்கு மனப்பூர்வமான
வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.” – என்றார்.










