மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முறையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இலங்கை செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் வலியுறுத்தினார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கடந்த முறை சம்பள நிர்ணயசபை ஊடாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை முறையாக கிடைக்கப்பெறுவதில்லை. மாறாக தொழிலாளர்களுக்கு வேலை சுமைதான் அதிகரித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்தகாலத்திலும் கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டது. 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் 12,14 நாட்கள் மாத்திரம்தான் வேலை வழங்கப்படுகிறது. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பள அதிகரிப்பு தொடர்பில் முறையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். செங்கொடி சங்கத்தை பொறுத்த வரையில் 2021 ஆண்டிலிருந்து இன்று வரை கூட்டு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு அதில் முறையான சட்டதிட்டங்களை உட்புகுத்த வேண்டும்.” – என்றார்.
மலைவாஞ்ஞன்










