“மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.
அத்துடன், நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (27) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையான குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையை பாடசாலை அதிபர் ஏ.ஏ சமூனினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,
” வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தாலும், வலுவான பொருளாதாரம் இல்லை என்றால், மீண்டும் அதே பிரச்சினைகள் தலைதூக்கும். மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
அத்துடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது.
அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன்.” – என்றார்.