” மலையகத்தின் எதிர்காலம் என்ன? இவர்களைத் தொடர்ந்து தொழிலாளர்களாக வைத்திருப்பதா? அல்லது காணியொன்றை வழங்கி, தோட்டக் கம்பனிகளுடன் இருக்கும் ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டக் கம்பனிகளுக்கு அந்த உற்பத்தியை வழங்குவதா என்பதையும் ஆராயவேண்டும். அப்படி செய்தால் சிறு தேயிலைத் தோட்ட உரிமைகளுக்கு நிராகராக மலையக மக்களும் உயர்த்தப்படுவர். இந்தப் பிரச்சினைகள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தவேண்டியுள்ளது.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவின் நிதி உதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரத் – லங்கா 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின்கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவின் பங்கேற்புடன் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கூறியவை வருமாறு,
” 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதல் கட்டமாக 1300 வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கத்தின் நன்கொடைகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறோம்.
தோட்டங்களில் வாழும் மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தப் பரிசு மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு நான் மீண்டும் நன்றி கூறுகிறேன்.
அதேபோல் எமது பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றிய மலையக மக்களின் மிகப் பெரிய குறையொன்று இருந்தது. தமக்கென காணியோ, வீடு ஒன்றோ இல்லாமல் இருந்தது. உண்மையில், குறிப்பிட்ட காலம் அவர்களுக்கு வாக்குரிமை இருக்கவும் இல்லை. எனினும், அந்த அரசியல் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், பொருளாதார, சமூக உரிமைகளை வழங்க வேண்டியிருக்கிறது. இதில் ஒரு பணியை நாம் இன்று முன்னெடுத்துள்ளோம்.
முதலாவது வீடமைப்புத் திட்டம். வீடுகளை அமைப்பதற்கு காணிகளைப் பெற வேண்டியுள்ளது. இதற்காக தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. சில நேரம் அரசாங்கத்தின் காணிகளை வழங்க நேரிடும். இதற்கமைய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
இதுவொரு பிரச்சினை. இன்னுமொரு பிரச்சினை கல்வி. மலையக தமிழ் மக்களின் கல்வியை ஏனைய பிரதேசத்தில் உள்ள கல்வியுடன் ஒப்பிடும் போது, உண்மையில், ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்களின் கல்வி இதனைவிட முன்னிலையில் இருக்கிறது. தமிழ் மக்களின் பாடசாலைகளை, ஏனைய பாடசாலைகளின் நிலைமைக்கு நிராக மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை அனைத்துப் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
அதேபோல், மலையகத்தின் அனைத்து தமிழ் மக்களும் தோட்டங்களில் இல்லை. கல்வி கற்று, தொழில் பயிற்சிகளைப் பெற்று, விசேடமாக மலையகத்திற்கு வெளியே தொழில்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். சிலர் வெளிநாடு சென்றுள்ளனர். எனவே, ஏனைய மக்களைப் போல இந்த மக்களும் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதேபோல், மலையகத்தின் எதிர்காலம் என்ன? இவர்களைத் தொடர்ந்து தொழிலாளர்களாக வைத்திருப்பதா? அல்லது காணியொன்றை வழங்கி, தோட்டக் கம்பனிகளுடன் இருக்கும் ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டக் கம்பனிகளுக்கு அந்த உற்பத்தியை வழங்குவதா என்பதையும் ஆராயவேண்டும். அப்படி செய்தால் சிறு தேயிலைத் தோட்ட உரிமைகளுக்கு நிராகராக மலையக மக்களும் உயர்த்தப்படுவர்.
இந்தப் பிரச்சினைகள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தவேண்டியுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதுகுறித்து அதிக ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். அதேபோல், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த அனைவரையும் இணைந்துக் கொண்டு, கட்சி பேதமின்றி, இதுகுறித்த யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதிருக்கும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்திற்கு நாம் தயாராக வேண்டும். நீண்ட காலமாக நாம் துன்பங்களை எதிர்கொண்டோம்.
எனினும், இன்று வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறோம். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உணவு இல்லாத, எரிபொருள் இல்லாத நாட்டையே நான் அன்று பொறுப்பேற்றுக் கொண்டேன். இன்று உணவு, எரிபொருள் ஆகியன இருக்கின்றன.
பொருளாதாரத்தை மேம்படுத்து முன்நோக்கிச் செல்லும் போதும் பிரச்சினைகள் இருக்கின்றன. வரி அதிகரிக்கப்பட்ட பிரச்சினை இருக்கிறது. எனினும், இந்தப் பிரச்சினைகள் நீண்ட காலத்திற்கு இருக்காது. சிறிது காலம் செல்லும் போது அந்த வரிச் சுமை குறையும்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளின் மூலம் இந்தக் காலத்தில் முன்நோக்கிப் பயணிக்க முடிந்தது. இந்த உதவிகள் கிடைத்திருக்காவிட்டால், எம்மால் முன்நோக்கிப் பயணித்திருக்க முடியாது. எனவே, நாம் இந்தியாவுடன் இருக்கும் பொருளாதார உறவுகளை மேலும் வலுத்திக்கொள்ள பணியாற்றி வருகிறோம். அனைத்து நாடுகளும் தமது எல்லைகளுக்குள் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் மேம்படுத்திக் கொள்ளவே முயற்சித்தன. எனினும், இந்த நிலை மாறியுள்ளது. விசேடமாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சந்தர்ப்பத்தில், நாமும் இதிலிருந்து பயன்பெற வேண்டும்.

இந்தியப் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தபோது, இதுகுறித்து இணக்கப்பாட்டிற்கு வந்து, இதனை மையப்படுத்தி பணியாற்றி வருகிறோம். இதற்கமைய இந்த வீட்டுத் திட்டத்திற்கு உதவிகளை வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.”










