ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மார்ச் 26 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை இந்தக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதது.
மேற்காசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பின்னணியில் ரஷ்ய குழுவின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
மேற்காசிய மோதல்களை அடுத்து, அனைத்துலகச் சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலருக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், கியூஆர் குறியீடு (QR code) மூலம் எரிபொருளை மட்டுப்படுத்தி விநியோகிக்கும் முறையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் மீதான விற்பனைத் தடைகளை அமெரிக்கா தளர்த்திய பின்னர், ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகத்தைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதுவர் எல். ஜகரியனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
