2021 கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் COVID – 19 தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சாதாரணதர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடாத்தும் தீர்மானம் தொடர்பில் நாளை (16) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணகல்விப் பணிப்பாளர்கள், அழகியல் துறைசார் பணிப்பாளர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, 2020 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.










