நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3,538 பேர் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 6 மரணங்கள் பதிவாகியுள்ளன. அம்மாவட்டத்தில் மட்டும் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










