ஈரான் அணிக்கு அமெரிக்கா ஓரவஞ்சனை

உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சீட்டில் நகரங்களுக்கு வந்து செல்லும் ஈரான் கால்பந்து அணியினர் மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தாது என அறியமுடிகின்றது.

அமெரிக்காவின் உலகக் கோப்பைக்கான உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் (FIFA) முறைப்பாடு அளிக்கப் போவதாக ஈரான் அணி எச்சரித்த போதிலும், அமெரிக்கா தன் முடிவில் உறுதியாக உள்ளது.

ஈரான் அணியினரின் பயண ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், தற்போதைக்கு முந்தைய திட்டமே தொடரும் என்றும் உலகக் கோப்பைக்கான வெள்ளை மாளிகை பணிக்குழுவின் நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ கியுலியானி (Andrew Giuliani) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தாங்கள் விளையாடும் போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டும் என்றும், போட்டி முடிந்த உடனேயே மெக்சிகோவில் உள்ள டிஹுவானா (Tijuana) பயிற்சி முகாமிற்குத் திரும்பிவிட வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஈரான் அணி கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

தங்கள் அணிதான் “இந்த உலகக் கோப்பையிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட அணி” என்று ஈரானின் பயிற்சியாளர் அமீர் காலேனோய் (Amir Ghalenoei) ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் நியூசிலாந்துக்கு எதிரான தங்களது முதல் போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே ஈரான் குழுவினர் அமெரிக்காவை விட்டு வெளியேறினர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் முடிந்த அந்தப் போட்டிக்குக் பிறகு, ஈரான் அணி ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கக்கூட அமெரிக்கா விசா அனுமதியளிக்கவில்லை.

போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே அவர்கள் மெக்சிகோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இது அமெரிக்க விசா நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Related Articles

Latest Articles