அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலைத் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாரம் ஒருமுறையாவது இரவு 10 மணிக்குப் பின்னர் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசுவார். பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் கலந்துரையாடுவோம்.
ஆனால், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நான் அவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் கூட அவரிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. அது பரவாயில்லை.” – என்றார்.
ஜனாதிபதியான பிறகு அநுரகுமார திஸாநாயக்கவுடனான தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து மனோ கணேசன் எம்.பி. வெளியிட்ட இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
