அரசியலமைப்பு பேரவை இன்று (31) கூடவுள்ள நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படலாம் என அரசியலமைப்பு பேரவை உறுப்பினரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, விக்ரமரத்ன 2025 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இதுவரையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவுசெய்யப்படவில்லை.
பதில் கணக்காய்வாளர் நாயகமாக செயல்பட்டவரின் பதவி காலமும் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை பிரேரிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், ஜனாதிபதயின் பிரதிநிதி, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி, சிறு கட்சிகளின் பிரதிநிதி மற்றும் சிவில் உறுப்பினர்கள் மூவர் உட்பட அரசமைப்பு பேரவையில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










