இந்து சமுத்திரத்தில் ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தும்போது குறித்த நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படையினரும் இருந்துள்ளனர்.
இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது கடற்படை அதில் இருந்ததை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், மேற்படி தாக்குதலில் ஆஸ்திரேலிய கடற்படை நேரடியாக பங்கேற்கவில்லை எனம் அவர் கூறினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராணுவ கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டணி ஆக்கஸ் AUKUS என அழைக்கப்படுகின்றது.
இந்த ஆக்கஸ் திட்டத்தின்கீழ் அணுசக்தியில் இருந்து இயங்கக்கூடிய நீர்மூழ்கிக்கப்பல்களை ஆஸ்திரேலியா பெறவுள்ளது.
இதற்கமைய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான பயிற்சியின் ஒரு பகுதியாகவே ஆஸ்திரேலிய படையினர் அமெரிக்கக் கப்பல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன்ஓர் அங்கமாகவே ஈரான் கப்பல்மீது தாக்குதல்
நடத்திய அமெரிக்க நீர்மூழ்கியிலும் ஆஸ்திரேலிய படையினர் இருந்துள்ளனர்.
பாதுகாப்புத் துறையின் தகவலின் பிரகாரம், அமெரிக்க அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றும் பணியாளர்களில் சுமார் 10 பேரில் ஒருவர் ஆஸ்திரேலியர் என தெரியவருகின்றது.
எனினும், ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் ஆஸ்திரேலிய படையினர் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றும், அவர்கள் ஆஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் பிரதமர்தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பிலேயே ஈரான் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மூழ்கடித்தது.
இதில் 90 பேர்வரை பலியாகியுள்ளனர். 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சட்டம் மற்றும் சாசனத்துக்கமையவே இது விடயத்தில் இலங்கை செயல்பட்டது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மற்றுமொரு ஈரான் கப்பலையும் இலங்கை பொறுப்பேற்றுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
