இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஆடமாட்டோம் என அறிவித்துவந்த பங்களாதேஷ் அணி, ஐ.சி.சி. டி-20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் சபையின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது.
பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பங்களாதேஷ், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது.
இதையடுத்து 2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.
இந்நிலையில், பங்களாதேஷ் அணி விலகியதால் ஸ்கொட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது.










