சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான அதேப் நஜீப் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கிய இந்தத் தீர்ப்பில், 2024 டிசம்பரில் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போது ரஷ்யாவில் அகதியாக வாழும் பஷார் அல்-அசாத்திற்கு எதிராக திட்டமிட்ட கொலை, சித்திரவதை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல், ரஷ்யாவில் வசித்து வரும் அவரது தம்பியான மஹர் அல்-அசாத்திற்கும் திட்டமிட்ட கொலை மற்றும் சித்திரவதைக் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தெற்கு மாகாணமான டேராவின் (Deraa) முன்னாள் அரசியல் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரும், கடந்த ஆண்டு ஜனவரியில் சிரிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவருமான அதேஃப் நஜீப்பிற்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு டேராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர் இவர் ஆவார். இத்தாக்குதலே சிரிய உள்நாட்டுப் போருக்கு முக்கிய வித்தாக அமைந்தது.
நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட்டு சீருடையில் இருந்த நஜீப் மீது, கொலை, “15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் திட்டமிட்டுக் கொன்றமை” மற்றும் “மரணத்திற்கு வழிவகுத்த சித்திரவதைகள்” போன்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.
சிரிய மக்களுக்குக் கிடைத்த நிம்மதி
முன்னாள் அரசின் முக்கியப் புள்ளிகள் மீது இடைக்கால அரசாங்கம் இந்த ஆண்டு விசாரணைகளைத் தொடங்கிய நிலையில், அசாத் குடும்பத்தினருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.
முன்னாள் சிரியத் தலைவர் நாட்டின் “உயர்மட்ட முடிவெடுப்பவராக” இருந்து, அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்தக் குற்றங்களைச் செய்ய வசதி செய்து கொடுத்தார் என்பது சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஃபக்ர் அல்-டின் அல்-ஆரியன் தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிரிய மக்கள், தங்களது குழந்தைகளைச் சித்திரவதை செய்து, வீடுகளை அழித்து, தங்களை இடம்பெயரச் செய்தவர்கள் இறுதியாகத் தண்டிக்கப்பட்டுள்ளமை தங்களுக்குப் பெரும் மனநிம்மதியையும் நீதியையும் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.










