மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, மக்களிடையே இம்முறை புத்தாண்டு உற்சாகம் காணப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மத்தியிலேயே புத்தாண்டை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

இம்முறை மே தினம் வெசாக் போயா தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

“மே தினத்துக்குப் பதிலாக அன்றைய தினம் நாம்  ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.  ” என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

புதிய ஆண்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் நிகழும் என்றும் தெரிவித்தார்.

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தைத் தமது கட்சி வைத்துள்ளது என்றும், வரவிருக்கும் எந்தவோர் அரசியல் சவாலையும் எதிர்கொள்ளத் தமது அணி தயாராக இருக்கின்றது என்றும் மஹிந்த ராஜபக்ச இதன்போது மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles