இலங்கையர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைந்துள்ள அதேவேளை, மூன்றில் இரண்டு பகுதியினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் (CPA) சமூக சுட்டிக்காட்டி பிரிவு (Social Indicator) வெளியிட்டுள்ள புதிய ‘ஜனநாயக ஆட்சிக்கான நம்பகத்தன்மை சுட்டெண்’ கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து 75.5% மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் குறித்து 29.4% மக்கள் மாத்திரமே திருப்தி தெரிவித்துள்ளனர்.
மலையக மக்கள் மற்றும் முஸ்லிம்களின் அமோக ஆதரவு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு மலையகத் தமிழ் மக்களிடையே அதிகபட்சமாக 94.4% திருப்தி விகிதம் பதிவாகியுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தினரிடையே 93.4% ஆதரவு கிடைத்துள்ளது.
சிங்கள மக்களிடையே அவரது ஆதரவு விகிதம் சற்றுக் குறைவாகக் காணப்பட்ட போதிலும், பெரும்பான்மையான சிங்கள மக்கள் (69.9%) ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளனர்.
வயதுக் குழுக்களின் அடிப்படையில், 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே ஜனாதிபதிக்கு 81.6% அதிகபட்ச ஆதரவு கிடைத்துள்ளது.
அத்துடன், கிராமப்புற மக்களில் 76.4% பேர் ஜனாதிபதியின் ஆட்சியில் திருப்தியடைந்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு
ஆய்வில் பங்கேற்றவர்களில் 64.1% பேர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். எனினும், இந்த ஒழிப்பு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று 23.6% மக்கள் மாத்திரமே கருதுகின்றனர்.
அதேவேளை, 40.5% மக்கள் ஜனாதிபதி முறையை ஒழிப்பதை ஆதரித்த போதிலும், அதனை தற்போதைக்கு அவசர முன்னுரிமையாகக் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 23% மக்கள் இந்த ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கைச் செலவு
பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளவர்களில் 51.4% பேர், தங்களது வீட்டுப் பொருளாதார நிலைமை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 18.2% மக்கள் மாத்திரமே தங்களது பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மேலும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் கையாளுதல் குறித்து பொதுமக்களின் கருத்து சமமாகப் பிளவடைந்துள்ளது. இதில் 45.3% பேர் திருப்தியடைந்துள்ள அதேவேளை, 44% பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் திறன் மற்றும் அனர்த்த நிவாரணம்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் திறமையான ஆட்சித் திறன் குறித்து 62.8% மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர். அத்துடன், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகள் குறித்து 68.6% மக்கள் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் விதம் குறித்து 51.6% மக்கள் திருப்தி அடைந்துள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாடு தழுவிய கருத்துக்கணிப்பானது 2026 மே 23 முதல் ஜூன் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 1,240 பேரிடம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










