ஹட்டன் – டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், ஹட்டன் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில், முற்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில், கடந்த 21 ஆம் திகதி, கூரான ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொகவந்தலாவை – பெற்றோசோ தோட்டத்தில் உள்ள தனது மனைவியின் சகோதரர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையிலேயே கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் டிக்கோயா மருத்துவமனையில், தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் மருத்துவ அறிக்கை பெறுவதற்காக முன்னதாக ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பதுளை, ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்த 47 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் பொகவந்தலாவை – கெம்பியன் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பி, கூரான ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க ஆபரணங்களும் ஹட்டன் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட தம்பதியரின் உடலங்கள், மக்களின் கண்ணீரஞ்சலிக்கு மத்தியில் நேற்று டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
