நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர்-8’ சுற்றுக்கு ஜிம்பாப்வே முன்னேறி உள்ளது. அயர்லாந்து அணி உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து சிம்பாப்வே அணி புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனால் குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருந்த முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறி உள்ளது.
முன்னதாக, கடந்த 2009-ல் அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதேபோல கடந்த 2022, 2024-ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து இந்த முறையும் அந்த அணி நாக்-அவுட் சுற்றான அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் அந்த அணி டி20 உலகக் கோப்பை பட்டம் வென்றிருந்தது.
குரூப்-பி பிரிவில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணி உடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அதன் காரணமாக அந்த அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
அதேபோல சிம்பாப்வே அணி கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அடுத்த சுற்றுக்கு இரண்டாவது முறையாக முன்னேறி உள்ளது கவனிக்கத்தக்கது. அந்த அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் இந்த தொடரில் அபாரமானதாக அமைந்துள்ளது.
இதுவரை இந்தியா, இலங்கை,சிம்பாப்வே, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
குரூப்-ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த அணி இன்று நடைபெறும் நமீபியா அணி உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் இந்த பிரிவில் இருந்து அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது.
