அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கப்படுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அடக்குமுறையைக் கையாள்வதற்காகவே அவசரகால நிலை நீடிக்கப்படுகின்றது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல சுட்டிக்காட்டினார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்தக்கொள்வது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ டித்வா பேரிடரின் பின்னரே அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும், அதனை நீடிப்பதற்கு தற்போது எந்தவொரு தேவைப்பாடும் இல்லை.
மேற்படி சட்டத்தை நீடித்துக்கொள்வதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தர்க்கங்களும் ஏற்புடையவை அல்ல.
அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு அலையை ஒடுக்குவதற்காகவே இப்படியான ஜனநாயக விரோத செயல் இடம்பெறுகின்றது.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குற்றஞ்சாட்டினார்.
சாதாரண சட்டங்களின்கீழ் செய்யக்கூடிய விடயங்களை முன்னெடுப்பதற்கு அவசரகாலச் சட்டம் எதற்கு? எனவே, இதன் பின்னணியில் வேறு நோக்கம் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.










