ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை விதித்துள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட முதல் வருவாய் அந்நாட்டின் மத்திய வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் துணை சபாநாயகர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சுங்கக் கட்டண முறையானது கப்பல்களின் சரக்கு வகை மற்றும் பாதுகாப்பிற்கான ஆபத்து நிலையைப் பொறுத்து மாறுபடும் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் முன்னர் மறுத்திருந்த நிலையில், தற்போது நிதியாதாரங்கள் திரட்டப்பட்டிருப்பதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தக் கட்டணங்களின் சரியான மதிப்பு அல்லது யாரால் செலுத்தப்பட்டது என்பது குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அதே சமயம், ஈரானுக்குக் கட்டணம் செலுத்தும் கப்பல்கள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் ஈரானின் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.










