தரமற்ற நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்த அரசு முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“வரலாற்றில் முதல் முறையாகத் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டமையால், லக்விஜய நுரைச்சோலை மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய 810 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 678 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது.
* முதல் அலகு: 216 மெகாவோட்
* இரண்டாம் அலகு: 230 மெகாவோட்
* மூன்றாம் அலகு: 232 மெகாவோட்
நிலக்கரி மூலம் மின் உற்பத்தி குறையும் போது, அதிக செலவுடைய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவை, 75 இலட்சம் மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கின் போர்ச் சூழலை ஒரு சாட்டாகக் கூறி, தவறான தகவல்கள் மூலம் மின் கட்டணத்தை உயர்த்தும் ‘மக்கள் விரோத’ செயலில் அரசு ஈடுபட்டுள்ளது.
நுரைச்சோலையில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவது குறித்து அரசு நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
அரசின் இந்த மோசடி நடவடிக்கையால் மின் கட்டணத்தை உயர்த்துவது, மக்களுடன் செய்துகொண்ட சமூக உடன்படிக்கையை மீறும் செயலாகும்.” – என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
போரைக் காரணமாகக் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த அரசு முற்பட்டால், மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
