இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPay ஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.
விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக, GovPay 45 நாட்களில் அதன் வருமானத்தை 01 பில்லியன் ரூபாவில் இருந்து 2 பில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்க முடிந்தது.
2025 பெப்ரவரி 07 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்றுவரை 70,178 க்கும் மேற்பட்ட GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 221 அரச நிறுவனங்களில் 3,372 அரச சேவைகளுக்கான கட்டண வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விரைவான வளர்ச்சி, பொதுமக்களும் அரச நிறுவனங்களும் இந்த கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலோபாய தலைமையின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA),LankaPay உடன் இணைந்து செயல்படுத்திய GovPay, இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய சேவை வழங்குநராக மாறியுள்ளது. இந்த டிஜிட்டல் தளம் அனைவருக்கும் பொதுவான, திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
2025 ஏப்ரல் 10 ஆம் திகதி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான ஒன்லைன் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கட்டமைப்பின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக 66 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த சேவை தற்போது தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் முழுவதும் செயல்படுகிறது.
இது 2025 டிசம்பர் மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸுடன் இணைந்து LankaPay இன் ஆதரவுடன்,2026 ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணக்கம் தெரிவித்துள்ளது.
GovPay , பிரதேச செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூரட்சி மன்றங்கள் ஊடாக அதன் பிரவேசத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்க சேவைகளை அணுகுவதை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை போன்ற நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் GovPay க்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்களில் அடங்குகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் இதற்கு நிலவுகின்ற அதிக வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தையும், இந்த டிஜிட்டல் தளத்தின் வியாபிப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
வழக்கமான அரச சேவைகளுக்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கும் GovPay ஆதரவு அளித்தது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல், இது Rebuilding Sri Lanka அனர்த்த நிவாரண நிதியத்திற்கு டிஜிட்டல் நன்கொடைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நன்கொடைகள் உட்பட 909 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 14 மில்லியன் ரூபா நிதியை திரட்ட உதயுவியுள்ளது.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, மேலதிகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கி, மேம்பட்ட வசதிகளுடன் கூடிய www.govpay.lk நவீனமயமாக்கும் பணியில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முதல் ஆண்டில் 02 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் 45 நாட்களில் 01 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியதன் மூலம், GovPay டிஜிட்டல் தளம், 2030 ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை யதார்த்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான தொடக்கமாகக் காணலாம்.










