“நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், தனிக்கட்சி ஆட்சியை அமைப்பதற்காக ஜனநாயகத்தைக் கூட மீறி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
காலி – தலபிடிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
வாக்குறுதிகளை மறந்த அரசாங்கம்:
“மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவோம், 12 இலட்சம் ரூபாய்க்கு விட்ஸ் (Vitz) ரக காரை வழங்குவோம், வறுமையை ஒழிப்போம் எனப் பல்வேறு வாக்குறுதிகளை வழியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆனால், தேர்தல் காலத்தில் அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
வழமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் எனக் கூறிவிட்டு, இன்று 220 இலட்சம் மக்களையும் ஏமாளிகளாக்கி அரசாங்கம் தமக்குத் தேவையானவாறு முடிவுகளை எடுத்து வருகின்றது.
எதிர்க்கட்சியினர் தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது, அத்தகைய முக்கியமான விடயங்களை அரசாங்கம் கேலி செய்து வருகின்றது.
தொழிற்சாலைகள் மூடல் – பொருளாதார வீழ்ச்சி:
இன்று ஆடைத் தொழிற்துறையில் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 52 சதவீத பங்களிப்பை வழங்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துக்கள் பராட்டே (Parate) சட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த ஏல நடவடிக்கைகள், தற்போது மீண்டும் தொடர்கின்றனவே தவிர, அவர்களுக்கான கடன் மறுசீரமைப்புகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
இவற்றை மறைப்பதற்காகவே, ‘ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,000 ரூபாய் போதுமானது’ போன்ற உண்மைக்குப்புறம்பான புள்ளிவிவரங்களைக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது.
நீதித்துறைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்:
முறைமை மாற்றம் (System Change) எனக் கூறி நாடே ஏமாற்றப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியையும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வைத்துக்கொண்டு, மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கின்றது.
இது நீதியரசர்களின் சுயாதீன தன்மையை அழித்து, சட்டத்தின் ஆட்சியை மீறும் ஜனநாயக விரோதச் செயலாகும். அரசியலமைப்பின் 3, 4 மற்றும் 83 ஆம் பிரிவுகளின்படி, இத்தகைய திருத்தங்களுக்குப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) ஒன்றும் நடத்தப்பட வேண்டும்.
எனவே, மக்கள் உணர்ச்சிவசப்பட்டு அலைக்கு அடிபட்டு வாக்களிக்காமல், அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வுடன் தரவுகளின் அடிப்படையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.










