பசி, சோர்வு… ‘சிறைச்சாலை போல இருந்தது’ – செவுட்டாவுக்குள் சென்ற புலம்பெயர்ந்தோர் மீண்டும் மொரோக்கோ திரும்பல்

ஸ்பெயினின் ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவுக்குள் (Ceuta) நீந்தியும், எல்லை வேலிகளைத் தாண்டியும் பெருந்திரளாக நுழைந்த புலம்பெயர்ந்தோர், அங்கு எதிர்கொண்ட கடுமையான சூழ்நிலைகளால் மீண்டும் மொரோக்கோவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

பசி, சோர்வு மற்றும் உள்ளூர்வாசிகளின் விரோதப் போக்கு காரணமாக ஐரோப்பாவில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் தங்களது கனவு தகர்ந்ததாக திரும்பிச் சென்ற பலர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், செவுட்டாவின் பாதுகாப்பு நிறைந்த எல்லையை கடந்து ஸ்பெயினுக்குள் நுழைய முடியும் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் அங்கு சென்றதாக அவர்கள் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், செவுட்டாவை அடைந்த பின்னரே ஸ்பெயினின் பிரதான நிலப்பரப்புக்குத் தொடர்ந்து செல்ல தங்களுக்கு வழியில்லை என்பதை அவர்கள் உணர்ந்ததாக கூறுகின்றனர்.

‘சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என நினைத்தேன்’

மொராக்கோவின் ஃபெஸ் (Fez) பகுதியைச் சேர்ந்த பேக்கரி ஊழியரான பிராஹிம் என்பவர், ஆயிரக்கணக்கானோர் எல்லையைக் கடக்கும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பார்த்த பின்னர் தனது வேலையை விட்டுவிட்டு செவுட்டாவுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

“நாங்கள் முன்னேறுவதற்காகத்தான் வந்தோம். ஏமாற்றமடைவதற்காக அல்ல. அங்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் செவுட்டாவில் எனக்கு அதிர்ச்சியே காத்திருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் பிழைத்ததாகக் கூறிய பிராஹிம், செவுட்டாவில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அவற்றை வாங்க தன்னிடம் பணம் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“ஒரு டுனா சாண்ட்விச்சின் விலை எப்படி 100 திர்ஹாம்களாக ($10.75) இருக்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘செவுட்டா ஒரு சிறைச்சாலை போல் இருந்தது’

மொராக்கோவுக்குத் திரும்பிய பலர், செவுட்டாவில் உணவு மற்றும் குடிநீரைப் பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

பல்பொருள் அங்காடிகளும் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் உணவு மற்றும் தண்ணீருக்காக அலைந்ததாகவும், கடலில் நனைந்த ஆடைகள் உலரும் வரை வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“செவுட்டா ஒரு சிறைச்சாலை போல் இருந்தது. அங்கு செய்வதற்கு எதுவுமே இல்லை. எல்லாமே மூடப்பட்டிருந்தன” என டாஞ்சர் மெட் (Tanger Med) துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தனது பணிக்குத் திரும்ப வேண்டியிருந்ததால் தனது பெயரை வெளியிட அவர் மறுத்துள்ளார்.

தாக்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் குற்றச்சாட்டு

செவுட்டாவில் பெரும்பான்மையாக வசிக்கும் மொராக்கோ நாட்டவர்களே தங்களைத் தாக்கி அங்கிருந்து விரட்டியதாக சில புலம்பெயர்ந்தோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

மொராக்கோவைச் சேர்ந்த உணவக ஊழியரான யாசின் இச்சௌ, செவுட்டாவின் எல் பிரின்சிபே பகுதியில் தான் தாக்கப்பட்டு துரத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“நாங்கள் செவுட்டாவை விட்டு வெளியேறும் நிலையை உருவாக்கும் வகையில் அவர்கள் எங்களைச் சுற்றி வளைத்தனர். கடைகள் பெருமளவில் மூடப்பட்டதன் மூலம் அவர்களது திட்டம் வெற்றியடைந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்குத் திரும்பும் செவுட்டா

இதனிடையே, செவுட்டாவில் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான கடைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து வாகனங்களும் வீதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், நகரின் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் பதற்றமாகவே இருப்பதாக சில குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, செவுட்டாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையம் முழுமையாக நிரம்பியுள்ளதாக அங்குள்ள நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மையத்தில் புதிதாக எவரையும் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், செவுட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இருப்பதாக மதிப்பிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles