ஈரானின் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் நிபந்தனையற்ற சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஈரான் நிபந்தனைகளின்றி சரணடைவது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வு எனவும், ஈரானின் வளர்ச்சிக்காக அயராது உழைப்போம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. அதன்பிறகு, ஒரு சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாங்களும் எங்களின் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் ஈரானை அழிவின் விளிமில் இருந்து மீட்க அயராது பாடுபடுவோம்.
ஈரானை பொருளாதார ரீதியாக முன்பை விட சிறந்ததாகவும், வலிமையாகவும் மாற்றுவோம். ஈரானை மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள் (மேக் ஈரான் கிரேட் அகயின்)” எனத் தெரிவித்துள்ளார்.










