“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார்.
ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது.
ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம்.
ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது.”எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் நகரங்கள்மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க படை தளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.










