அமெரிக்கா தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்தப் போரின் விளைவாக எரிபொருள் விலையேற்றம் தொடரும் என்பதால் அமெரிக்க மக்கள் அதற்குத் தயாராக இருக்குமாறும் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்றமும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழி எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தும் தொடர்ந்து முடங்கியுள்ளன.
“இந்த நீரிணை ஈரானின் உத்தரவின் கீழ் மட்டுமே திறக்கப்படும் . தோல்வி என்ற நிஜத்தை ஏற்றுக்கொள்ளாமல் கற்பனைகளில் மூழ்கியிருக்கும் வரை, ஈரான் இந்த முற்றுகையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்,” என்று ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் காசிம் கரிபாபாடி சனிக்கிழமை அதிகாலை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
