ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை தனது “புதிய நிலப்பரப்பு” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வணிக நலன்களுக்கு எதிராகவும் ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதப் போக்கு கொண்ட புதிய செயலாளரான மொஹ்சன் ரெசாய், அரசு தொலைக்காட்சியான IRIB-க்கு அளித்த பேட்டியில்,
“அமெரிக்கா தொடுத்துள்ள ‘பொருளாதாரப் போரில்’ அண்டை நாடுகள் இணைந்தால், வளைகுடா பகுதியில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லப்படும் மாற்று வழித்தடங்களை ஈரான் இலக்கு வைக்கும்.
அந்த அண்டை நாடுகள் ‘எதிரியாகக் கருதப்படும்’. அவர்களின் பொருளாதார நலன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்” என்று கூறினார்.
1980-88 ஈராக் போரின் போது இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமை தளபதியாக இருந்த ரெசாய், தெஹ்ரானின் அரசியல் மற்றும் ராணுவ நிலையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டார்.
மேலும், “இதுவரை நாங்கள் அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமே இலக்கு வைத்துள்ளோம்; ஆனால் அவர்கள் எங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க நினைத்தால், ஈரானைச் சுற்றிலும் மற்றும் பிற இடங்களிலும் அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் உள்ளன, அவற்றின் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு உதவும் அல்லது வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
