“யாழில் உயிரிழந்த 17 வயது சாரதியின் மரணம் தொடர்பான பொலிஸ் விசாரணையில் திருப்தியில்லை என அவரின் உறவினர்கள் கருதும் பட்சத்தில் உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயார்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“பொலிஸாரின் கட்டளையை ஏற்காது, சந்தேகத்துக்கிடமான வேன் சென்றுள்ளது. முதலில் வானத்தை நோக்கியே எச்சரிக்கை சூடு நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் கட்டுப்படாததாலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 17 வயது சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வாகனத்துக்குள் இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். குற்ற விசாரணைப் பிரிவும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
வாகனத்துக்குள் என்ன இருந்தது என்பது உள்ளிட்ட தகவல்கள் பொலிஸ் விசாரணையின் பின்னரே தெரியவரும்.
மேற்படி இரு விசாரணைகளிலும் திருப்தி இல்லை என உறவினர்கள் கருதினால், அது தொடர்பில் தெரிவிக்கலாம். உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயார்.” – என்றார்.
