விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் ஒரு தேசமாக நாம் இழந்த பொருளாதார வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.
இதற்காக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், அதில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு , தரவு மையங்கள் போன்ற பொருளாதார வாய்ப்புகள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை எப்படியாவது வெளியிட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் (COYLE) 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘தலைமுறை தலைமுறையாக வலுவான நாளையை உருவாக்கும் இன்று’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.
எந்தவொரு பொருளாதாரமும் அதன் மீதான நம்பிக்கையிலேயே முன்னேறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வர்த்தகர்கள், நிதித் துறையில் பணியாற்றுவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பொருளாதாரம் குறித்த நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும், அவநம்பிக்கை எப்போதும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் என்றும் தெரிவித்தார்.
இன்று ஒரு தேசமாக நமக்குத் தேவைப்படுவது அசைக்க முடியாத, அதேநேரம் வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு பொருளாதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தையே நாம் தற்போது கட்டியெழுப்பி வருகிறோம் என்றார்.
உள்ளக அதிர்வுகளை நாம் வெற்றிகொண்டாலும், தற்போது மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஒரு வெளிப்புற அதிர்வு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 42% அதிகரித்துள்ளதால் உலகச் சந்தையில் கடும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.
இது உள்நாட்டு நுகர்வோர் மத்தியிலும் நம்பிக்கையற்ற தன்மையை காணக் கூடியதாக இருந்தது. மார்ச் 1ஆம் திகதி 4500 கிலோ லீட்டராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதி 10,500 கிலோ லீட்டராக அதிகரித்துள்ளது.
2022 இல் டொலர் தட்டுப்பாட்டினால் நெருக்கடி ஏற்பட்ட போதும் இம்முறை ஏற்பட்டிருப்பது விநியோகப் பாதைகள் முடங்கியதால் வந்த விநியோக நெருக்கடியாகும். இதனைத் தனித்தனியாக அல்லாமல் அனைவரும் கூட்டாக நின்று எதிர்கொண்டு வெல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் ‘பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை’ அமைத்துள்ளதுடன், விநியோகத்தைத் தடையின்றிப் பேண நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோர் தலைமைத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபை , நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காளராக ஆற்றி வரும் பணியை ஜனாதிபதி பாராட்டினார். அதன் புதிய தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் புதிய தலைவர் சுரேன் சந்திரரத்ன, முன்னாள் தலைவர் மஞ்சுள விஜேசுந்தர மற்றும் சிரேஷ்ட உப தலைவர் டேன் டி சில்வா ஆகியோரும் இதன்போது உரையாற்றினர். புதிய தொழில்முனைவோர்களுக்கு ஒரு புதிய நாளையை உருவாக்குவதே தனது எதிர்பார்ப்பு என புதிய தலைவர் சுரேன் சந்திரரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்:
இந்த இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபைக்கும் எனக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. அன்று எமது கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து என்னிடம் பல கேள்விகளை முன்வைத்தீர்கள். நாம் ஆட்சிக்கு வந்து இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.
அன்று உங்களுக்கு இருந்த கேள்விகள் இப்போதும் இருக்கிறதா? எமது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், அது இன்று நீங்கியிருக்கும் என்று நான் கருதுகிறேன்.ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு நமது தாய்நாட்டை ஒரு வெற்றிகரமான நாடாக மாற்றுவதே இப்போது நம் முன்னுள்ள பணியாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு எதுவும் எஞ்சாது. அனைத்தும் முடங்கி விடும். அது சமூகக் கட்டமைப்பிற்கு எவ்வளவு பெரிய அழிவைக் கொண்டு வரும் என்பதற்கு அண்மைக் காலத்தில் நமக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன. எனவே, ஒரு அரசாங்கம் என்ற வகையில் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதே எமது முதல் பொறுப்பாகும்.
நாம் பதவியேற்கும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு விரிவான கடன் திட்டத்தில் இணைந்திருந்தோம். அதில் சில இலக்குகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த இலக்குகளைத் தாண்டி, பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பல காரணிகள் உள்ளன.
இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை 2025 இல் பதிவு செய்தது. நடைமுறைக் கணக்கு மீதியை மேலதிகமாக மாற்றியது, பல தசாப்தங்களுக்குப் பிறகு 2025 இல் 17.2% வருமானத்தைப் பதிவு செய்தது மற்றும் இலங்கைக்கு அதிகப்படியான வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கிடைத்த ஆண்டாக 2025 ஐ மாற்றியது போன்றவை எமது விசேட வெற்றிகளாகும்.
இப்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. ஆனால் நமக்குத் தேவை அசைக்க முடியாத பொருளாதாரம். வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது எமக்கு வெளி அதிர்வுகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வலயத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் சந்தைகளினால் பிணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பல்வேறு துறைகளினால் பிணைக்கப்பட்டுள்ள உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு அதிர்வும் எம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய அதிர்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமான விடயமாகும்.
பொதுவாக, மார்ச் மாத தொடக்கத்தில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சுமார் 70 டொலராக இருந்தது. இப்போது அது 100 டொலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 42% அதிகரிப்பு. மசகு எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது.
எனவே, உலகில் உள்ள அனைவரும் இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் பங்காளர்களாக மாறிவிட்டனர். மேலும் சமூக நடத்தை குறிப்பிட்ட நெருக்கடி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் பொது மக்களை குறை சொல்லவில்லை. எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டின் விளைவுகளுக்கு நம் நாட்டு மக்கள் முகங்கொடுத்தனர்.
தீயில் கருகிய ஒருவர் தீப்பொறியைக் கண்டாலும் பயப்படுவார் என்று ஒரு பழமொழி உண்டு. அதனால்தான் மக்கள் எரிபொருள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எரிபொருளை சேமித்து வைக்கத் தொடங்குகிறார்கள். மார்ச் முதலாம் திகதி எங்கள் டீசல் விற்பனை 4500 கிலோலீட்டராக இருந்தது. மார்ச் 3 ஆம் திகதி எங்கள் டீசல் விற்பனை 10 500 கிலோலீட்டராக அதிகரித்தது.
பெட்ரோல் விற்பனை சுமார் 4000 கிலோலீட்டரிலிருந்து 9000 ஆக அதிகரித்துள்ளது. இப்போது அது மீண்டும் 6000 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இதிலிருந்து யாரும் தனியாக பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இதற்காக ஏதாவது செய்து அதை எதிர்கொண்டால், நாம் அனைவரும் இதிலிருந்து மீண்டு வரலாம்.
இந்த வெளிப்புற அலுத்தம் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் நாம் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. நமது எரிபொருள் சந்தையில் 47% வெளிப்புற நிறுவனங்களின் கைகளில் உள்ளது. எனவே, நாம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். மேலும் எரிபொருளை சாதாரண நுகர்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
2022 நெருக்கடிக்கு என்ன காரணம்? உலகின் விநியோகப் பாதைகள் தடைப்பட்டதால் அல்ல, எரிபொருள் கையிருப்புக்கள் தாக்கப்பட்டதால் அல்ல. எரிபொருளை இறக்குமதி செய்ய நம்மிடம் டொலர்கள் இல்லாமை தான் அதற்குக் காரணம். ஆனால் இப்போது நமக்கு அந்தப் பிரச்சினை இல்லை. நம்மிடம் 7.2 பில்லியன் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது. எனவே இன்று ஒரு நெருக்கடி வந்தால், அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளால் தான் ஏற்படும்.
எனவே, அதற்குத் தேவையான அனைத்து மாற்று வழிகள் குறித்தும் நட்பு நாடுகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை வழங்குவதே எமது பொறுப்பு.
அதன் சீர்குலைவு இந்தப் பொருளாதாரத்தில் நாம் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகள் பலவற்றை குறுகிய காலத்திற்கு நிறுத்திவிடும். எனவே, ஒரு அரசாங்கமாக எங்கள் ஒட்டுமொத்தத் திட்டம் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை உறுதி செய்வதாகும். நாம் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்க முடியும்.
ஆனால் நாம் அனைவரும் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதை கணிக்க முடியும். இந்த போர் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், நமது கணிப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.
தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் போருக்கு பாரிய சக்தியை உருவாக்கியிருக்கும் ஒரு சகாப்தம் இது. எனவே, இந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்ன சூழ்நிலையை உருவாக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது. குறுகிய காலத்தை நாம் கணிக்க முடியும். ஆனால் அந்த காலத்திற்கு அப்பாலும் போர் தொடர்ந்தால், உலகில் யாராலும் அதை கணிக்க முடியாது.
எனவே, இந்த இரண்டு மாதங்களுக்கு வலுசக்தி விநியோகத்தை நாங்கள் வழங்குவோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இருப்பினும், விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். நான் எண்ணெய் கிணற்றின் உரிமையாளர் அல்லது எரிபொருள் நிறுவனத்தின் பிரதிநிதி என்று இலாபம் ஈட்டுவதற்காக இதைச் செய்யவில்லை. இருப்பினும், ஒரு அரசாங்கமாக, தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
அதற்குத் தேவையான அனைத்து மூலோபாயங்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம். உள்ளக அலுத்தத்தை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் வெளிப்புற அலுத்தத்தை எதிர்கொள்ள எங்களுக்கு சிறிது காலம் ஆகும். நாங்கள் வெற்றிகரமான பாதையில் இருந்தோம். எனவே, நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஆனால் அந்த அதிர்ச்சியை நாங்கள் மிகச் சிறப்பாக சமாளித்து அதை அமைதிப்படுத்த முயற்சிக்கிறோம்.
எனவே நாம் அனைவரும் இந்த அதிர்ச்சியை ஒன்றாக எதிர்கொள்வோம். நாம் அனைவரும் நம்மைப் பற்றியும் பொதுவாக அனைவரையும் பற்றியும் சிந்தித்து முடிவுகளை எடுக்கவும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் இதுதான் நேரம் என்று நான் நம்புகிறேன்.
எனவே, ஓரளவிற்கு, நுகர்வு முறைகளில் சில மாற்றங்கள் தேவை. உலகில் நெருக்கடியில் சிக்கிய நாடுகள் அவற்றின் வழக்கமான நுகர்வு முறைகளின் அடிப்படையில் மீளவில்லை. நெருக்கடியான நேரத்தில், நாம் அனைவரும் சிறிது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, அனைவரும் சிறிது நிதானத்தைக் கடைப்பிடித்து, விவேகமான பொருளாதார நடவடிக்கைகளில் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி கொள்ள இதுவே வழி.
மேலும் எங்களிடம் ஒரு நீண்ட திட்டம் இருந்தது. டிஜிட்டல் மயமாக்கல் அதன் ஒரு முக்கிய பகுதியாகும். நாம் சிறந்த வாய்ப்புகளை இழந்த ஒரு நாடு. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் மூலம் உலகம் எப்போதும் புதிய பொருளாதாரங்களை உருவாக்கி வருகிறது. கடந்த நூற்றாண்டில், உலகில் பல்வேறு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய
பிரவேசங்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு இணையாக நமது தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் இணைக்கத் தவறிவிட்டோம்.
எனவே, உலகத்துடன் நாம் முன்னேறிச் செல்ல முடியவில்லை. டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் இந்த சகாப்தத்தில், புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதார வாய்ப்புகளாக மாறிவிட்டன. எனவே, இந்த சகாப்தத்தில் புதிய தொழில்நுட்பங்களின் பொருளாதார வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் ஊடாக இந்த சகாப்தத்தில் அடையப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு அரசாங்கமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
டிஜிட்டல் மயமாக்கலிலும் நாம் பாரிய பிரவேசத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் ரூபாவை டிஜிட்டல் மயமாக்கலுக்காக செலவிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். அதன் மூலம், நமது அரச பொறிமுறையில் எழுந்துள்ள அனைத்து பின்தங்கிய நிலையும், திறமையின்மையும் குறைக்கப்படும்.
நாங்கள் தற்போது முழு அரச கட்டமைப்பையும் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளில், நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பங்கு உங்கள் கைகளில் உள்ளது. நீங்கள் உங்கள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் அல்லது மும்மடங்காக்க வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள். ஒரு அரசாங்கமாக எமது வகிபாகம் உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதாகும். உங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தற்போதைய வர்த்தகத்தை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் 100% வளர்த்து, உங்கள் வர்த்தகத்தை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒரு பகுதியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர்கள், இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் புதிய தலைவர் சுரேன் சந்திரரத்ன, முன்னாள் தலைவர் மஞ்சுள விஜேசுந்தர, சிரேஷ்ட உப தலைவர் டேன் டி சில்வா உட்பட அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










