LPL தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு!

லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 கிரிக்கெட் தொடரின் போட்டி மத்தியஸ்தர், போட்டி நடுவர்கள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபையினால்  அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும் போட்டி நடுவர் குமார் தர்மசேன ஆகியோர், எல்பிஎல் தொடர் போட்டி இந்த குழாத்தில் இடம்பிடித்திருக்கின்றனர்.
எல்பிஎல் தொடரின் போட்டி மத்தியஸ்தர் குழாத்தில் ரஞ்சன் மடுகல்ல தவிர கிரேம் லப்ரோய், வென்டல் லப்ரோய் மற்றும் மனோஜ் மெண்டிஸ் ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இந்த நடுவர் குழாத்தில் குமார் தர்மசேனவுடன் இணைந்து எல்பிஎல் போட்டிகளுக்காக ருச்சிர பல்லியகுருகே, ரவிந்திர விமலசிறி, லின்டன் ஹன்னிபல், ப்ரகித் ரம்புக்வெல்ல ஆகிய சர்வதேச போட்டி நடுவர்களும் கடமையாற்றவிருக்கின்றனர்.
இவர்கள் தவிர இலங்கையின் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக செயற்படுகின்ற தீபால் குணவர்தன, ஹேமந்த போட்ஜூ, கீர்த்தி பண்டார, அசங்க ஜயசூரிய, ரொஹித்த கொட்டஹச்சி மற்றும் ரவிந்திர கொட்டஹச்சி ஆகியோருக்கும் எல்பிஎல் போட்டிகளின் போது பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
எல்பிஎல் தொடருக்கான போட்டி நடுவர்களில் ஒருவராக இருக்கும் குமார் தர்மசேன 2012ஆம், 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த நடுவருக்காக ஐ.சி.சி. வழங்கும் டேவிட் செப்பர்ட் விருதினை வென்றிருப்பதோடு 2015ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் கள நடுவராக செயற்பட்ட அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.
ரஞ்சன் மடுகல்ல, மொத்தமாக ஐ.சி.சி. இன் ஏழு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 15 நாட்கள் கொண்ட கிரிக்கெட் திருவிழாவாக இருக்கப் போகும் எல்பிஎல் தொடர் இம்மாதம் 26ஆம் திகதி ஹம்பந்தோட்டையில் ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles