மலையக இந்து குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மலையக இந்து குருமார் பல தசாப்தங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் சில பொதுவான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இது குறித்து கலந்துரையாடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்காக அரசாங்கத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக இந்து குருமார் இங்கு குறிப்பிட்டனர்.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள் உள்ளிட்ட குருமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










