மாகாணசபைத் தேர்தல் குறித்த கூட்டம் ஒத்திவைப்பு: மனோ காட்டம்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை 21ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முக்கிய ஆவணங்களுடன் அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த சூழலிலேயே இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பு குறித்துத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தெரிவுக்குழு உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி. தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசு எவ்வித அக்கறையுமின்றிச் செயற்படுகின்றது. நாளை நடைபெறவிருந்த தெரிவுக்குழுத் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருப்பது, மாகாண சபைகள் தொடர்பாக அரசிடம் நிலவும் அசமந்தப் போக்கின் அப்பட்டமான வெளிப்பாடாகும்” என்று சாடினார்.

மாகாண சபைத் தேர்தல் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், தெரிவுக்குழுவின் இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles