நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தன்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிறுமைத்தனமாக செயல்பட்டுவருகின்றார் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா எம்.பியின் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அர்ச்சுனா ராமநாதன் எங்கேயோ இருந்து முளைத்த ஒரு காளான். அந்த காளானுக்கு தன்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என ஆசை. அதற்கேற்ற வகையில் அவர் செயல்படுகின்றார். ஒரு வைத்தியர், நாடாளுமன்ற உறுப்பினர் நடந்துகொள்ளும் விதமாக அவர் நடப்பதாக தெரியவில்லை. அவரின் செயல் சிறுமைத்தனமாக உள்ளது.
பாவம் அந்த தம்பி, நல்ல எண்ணத்துடன் வந்தமாதிரி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது தனக்கு பிரபல்யம் கிடைப்பதற்காக இவ்வாறு செயல்படுகின்றதோ என எண்ணவேண்டியுள்ளது.” என்றார் சிவி விக்னேஸ்வர்.
