ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, அக்கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றது.
ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம், இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன , சம்பத் அதுகோரள மற்றும் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச உள்ளிட்டோரே இந்தியா செல்லவுள்ளனர்.
இந்த பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்திற்கும், இந்தக் குழு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருள்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்திற்கு முன்னதாக, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுஜன பெரமுன குழுவினர், சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.










