நாட்டில் யாராவது த#ற்#கொ# லை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“கொழும்பு துறைமுக நகரம், தாமரை கோபுரம், நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிர்மாணித்தது யார் அல்லது முப்பதாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது யார் போன்ற விடயங்களில் ராஜபக்சக்களின் பெயர் வரும்போது, ‘ஐயோ… இதை அவர்கள் செய்யவில்லை’ என்று மறுத்துக் கூறுவார்கள்.
ஆனால், நாட்டில் யாராவது த#ற்#கொ#லை செய்துகொண்டால் மட்டும், அதன் பின்னணியில் ராஜபக்சக்கள் இருக்கக்கூடும் என்று பழிசுமத்துகின்றனர். இன்னும் எவ்வாறான சம்பவங்களுக்கெல்லாம் எங்களது பெயரைப் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
தற்போதைய அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே ராஜபக்சக்கள், அரசு ஊழியர்கள், மதத் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரையும் இலக்கு வைத்து வேட்டையாடி வருகிறது.
அதிகாரத்தைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் முற்படுகின்றனர். ஆனால், இந்த ஆட்டம் நீண்ட நாட்களுக்குச் செல்லாது. 20 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால், 100 ஆண்டுகளுக்கான மக்கள் பணிகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார் நாமல் ராஜபக்ச.
