” பொதுத்தேர்தலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையும் எமது அரசாங்கத்தில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியான செந்தில் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை பசறையில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
” பதுளையில் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் எமது அரசாங்கத்தில் இருக்க வேண்டும். எம்முடன் இருக்கும் ஒரேயொரு பிரதிநிதி செந்தில் தொண்டமான். பதுளை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு செந்தில் தொண்டமான் பாரிய சேவையாற்றி வருகிறார். எமது மக்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்கின்றார். அவருக்கு எமது அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த அமைச்சரவை அமைச்சு பதவியொன்று வழங்கப்படும்.” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான சச்சிந்திர ராஜபக்சவும் கலந்துகொண்டார்.
– பதுளை செய்தியாளர்-